உசிலம்பட்டி அருகே வீட்டில் தயாரித்தபோது பட்டாசு வெடித்து வாலிபர் பலி தாய், குழந்தை படுகாயம்: 10 வீடுகள் சேதம்

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் (35). சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் ஆட்களை வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகளுடன், விசேஷ வீடுகளுக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகளையும் தயாரித்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மாற்றுத்திறனாளியான செக்கானூரணியை சேர்ந்த அஜித் (27) பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மாடி இடிந்து விழுந்தது. இதில் அஜித் உடல் சிதறி பலியானார். கீழ் வீட்டில் குடியிருந்த விபிதா (22), இவரது 6 மாத குழந்தை ஹர்ஷிதா இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உசிலம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுமார் 100 மீட்டர் பகுதி வரை சிதறிக் கிடந்த அஜித்தின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்களை போலீசார் சேகரித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பலியான அஜித் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பிரவீனிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். முறையாக வெடிமருந்தினை கையாளத் தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. தலைமறைவான பிரவீனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: