அண்ணாமலை பேச்சையெல்லாம் மக்கள் ஏற்க மாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

மதுரை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜவிற்கு பாடம் கற்பிக்கும், அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி: பாஜவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜவிற்கு பாடம் கற்பிக்கும். தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு நப்பாசை இருக்கிறது. ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழகம் பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி. தமிழகத்தின் வளர்ச்சியுடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது. அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கங்களுக்குத்தான் மக்கள் கொடுப்பார்கள். ஒரு போதும் பாஜவிற்கு அளிக்க மாட்டார்கள். பிரதமர் நினைத்ததை சாதித்துக் கொண்டு இருக்கிறார். கொள்கை என்பது வேஷ்டி மாதிரி. கூட்டணி என்பது துண்டு மாதிரி. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபடும். அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறிந்து பாஜவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: