சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஆந்திர மாநில எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, நகரி தொகுதியில் உள்ள தமிழ் மீடியம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா மற்றும் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் ரோஜா கூறியதாவது: நகரி தொகுதி, தமிழக எல்லை பகுதியில் இருப்பதால் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வந்துள்ளோம். எனது தொகுதியில் தமிழ் மீடியம் பள்ளிகள் உள்ளன.
அதற்காக 1 முதல் 10ம் வகுப்புவரை ஆயிரம் தமிழ் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் அவற்றை உடனடியாக அனுப்பி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திருத்தணி தாலுகாவில் விஜயபுரம் என்ற ஊர் தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தொழில்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திரபிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. அதன் தலைவராக 2 ஆண்டுகள் இருந்தேன். தொழில்பேட்டை இணைப்பு சாலைக்காக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்துவிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் முகவடிவத்தை பட்டு துணியில் நெய்து கொண்டு வந்து, முதல்வருக்கு அளித்தோம். நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக கழகங்கள் மூலமாக குறிப்பிட்ட தொகையை நெசவாளர்களுக்கு வழங்கி ஆதரவளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.