திருவையாறு அருகே நள்ளிரவில் போதையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

திருவையாறு: திருவையாறு அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு போதையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் சிவன் கோயில் 70 அடி கோபுரத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஏறிய ஆசாமி ஒருவர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சலிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருவூர் சப்இன்ஸ்பெக்டர் சார்லிமேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் 70 அடி கோபுரத்தில் ஏறிய தீயணைப்பு வீரர்கள் அருண்கணேஷ், வெங்கடேசன், கோபால் ஆகியோர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் கயிற்றை கட்டி அந்த ஆசாமியை பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த பரணி (45) என்றும், போதையில் அவர் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. போதையில் இருந்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: