குன்னூர் நகராட்சியில் ‌போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் திணறும் அமமுக

குன்னூர்: குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் அமமுக திணறி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் ‌30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்த ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ‌அதிமுக சார்பில் போட்டியிட பலரும் ‌வாய்ப்புகள் கேட்டு வருகின்றனர். ஆனால்  ‌அதிமுக‌ கட்சியின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகளின் உறவினர், கணவன், மனைவி உள்ளிட்டோருக்கு பல இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்சிக்கு நீண்ட காலம் பணியாற்றிய நிர்வாகிகளை புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குன்னூர் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்ட நபர்களுக்கு சீட் வழங்கியதால் கட்சி தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதேபோன்று அமமுக கட்சியில் இருந்து நேற்று முன்தினம் நகர செயலாளர் உட்பட ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய 2 பேருக்கு அதிமுக போட்டியிட உடனடியாக சீட் வழங்கியுள்ளது. இதனால் அதிமுக கட்சியில் பெரிய விரிசல் ஏற்பட்டு பரபரப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தலில் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் உதவிகள் செய்து தர இயலாது என அமமுக தலைமை தெரிவித்துள்ளது. இதனால், அமமுக சார்பில் 30 வார்டுகளில் ‌போட்டியிட அமமுகவினர் தயாராக இல்லையாம். இதனால், அமமுக தலைமை திணறி வருகிறதாம்.

Related Stories: