சென்னை: சென்னையில் 5 லட்சம் ரூபாய் போலி காசோலை கொடுத்து துணிக்கடையை லீசுக்கு எடுத்து துணிகளை திருடிக்கொண்டு தலைமறைவான டிப் டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த 28 வயதான கார்த்திக் விருகம்பாக்கத்தில் கடந்த ஓராண்டாக துணிக்கடை நடத்தி வருகிறார். தொழில் எதிர்பார்த்த அளவிற்கு நடக்காததால் கடையை காலி செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து துணிக்கடை விற்பனைக்கு இருப்பதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் அளித்துள்ளார். இதனை பார்த்து கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திக்கின் கடைக்கு டிப் டாப்பாக உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கடையை தான் லீசுக்கு எடுத்து நடத்திக்கொள்வதாக கூறி உள்ளேயுள்ள பொருட்களுடன் விலையை கேட்டுள்ளார். 5 லட்சம் ரூபாய் என கார்த்திக் விலை பேசி இருக்கிறார். அவர் அதற்கான காசோலையை கொடுத்து சாவியை பெற்றுக்கொண்டுள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை வங்கிக்கு சென்று காசோலையை கொடுத்த போது அது போலி என அறிந்து கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளார்.