நாகை மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ குணமுடைய கத்தாழை மீன்கள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம்: தங்கத்திற்கு ஈடானது என மீனவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி

நாகை: நாகை மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ குணம் கொண்ட 41 கத்தாழை மீன்கள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது.நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் மணிமுருகன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நேற்று கடலில் வலையை விரித்தபோது அதிகளவு மீன்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. வலையை படகில் இழுத்து பார்த்தபோது மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போன்று விலை மதிக்க கூடியதுமான கூரல் மீன் எனப்படும் கத்தாழை மீன்கள் 33 சிக்கியது தெரியவந்தது. அதேபோல் மற்றொரு விசைப்படகில் 6 மீன்களும், இன்னும் 2 விசைப்படகுகளில் தலா 1 மீனும் என மொத்தம் 41 கத்தாழை மீன்கள் வலையில் சிக்கியது. இந்த மீன்கள் குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் கத்தாழை மீன்களை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 41 மீன்களும் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: கோடியக்கரைக்கு தென்கிழக்கே கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வலையில் மிகவும் அரிதாக இந்த மீன்கள் சிக்கும். இந்த வகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்தாழை மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த மீன்கள், நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும். இந்த நெட்டி ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. ஆண்மை குறைவுக்கும் இந்த நெட்டி மூலம் மருந்து தயாரிக்கப்படுகிறது.

கத்தாழை மீனின் இறைச்சி குறைந்த விலைக்கு விற்றாலும் அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம். எனவே இந்த வகையான மீன்கள் சிக்குவது பேரதிர்ஷ்டம். நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு விசைப்படகில் 33 மீன்களும், மற்றொரு விசைப்படகில் 6 மீன்களும், இன்னும் 2 விசைப்படகுகளில் தலா 1 மீனும் என மொத்தம் 41 கத்தாழை மீன்கள் நேற்று சிக்கியது. இந்த மீன்கள் 18 கிலோவில் இருந்து 27 கிலோ வரை இருந்தன. மொத்தமாக 41 கத்தாழை மீன்கள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மொத்தமாக கத்தாழை மீன்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Related Stories: