உம்மன்சாண்டிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு அச்சுதானந்தன் ரூ.10.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். உம்மன்சாண்டி முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இருந்த பலருடன் இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

உம்மன்சாண்டி கலந்து கொண்ட பல அரசு நிகழ்ச்சிகளிலும் சரிதா நாயர் கலந்து கொண்டார். பின்னர் மோசடி புகாரில் இவர் கைது செய்யப்பட்டபோது, உம்மன் சாண்டிக்கும் சோலார் பேனல் மோசடியில் தொடர்பு இருப்பதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, உம்மன்சாண்டி ஒரு சோலார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அச்சுதானந்தனுக்கு எதிராக உம்மன்சாண்டி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உம்மன்சாண்டிக்கு. அச்சுதானந்தன் ₹ 10,10,000 நஷ்டஈடு வழங்க நேற்று உத்தரவிட்டது.

Related Stories: