தமிழக மக்களுக்கு கர்நாடகா அநீதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக மக்களின் உரிமை: ஜி.கே.வாசன்

சென்னை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக மக்களின் உரிமை, அதை கர்நாடக அரசு தடுக்க நினைப்பது கண்டனத்திற்குரியது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படியும் காவிரியில் கர்நாடக அரசு வழங்கும் தண்ணீரைக் கொண்டு தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதை தடுக்க நினைப்பது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

ஏற்கனவே கர்நாடக அரசும், காங்கிரசும் மேகதாதுவில் அணைக்கட்ட முனைப்பு காட்டி தமிழக மக்களை வஞ்சிகிறது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்கள் குடிநீருக்காக இந்த தண்ணீரையே நம்பி இருக்கிறார்கள். தற்பொழுது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக விரோத செயலாகும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிப்பதை கர்நாடக அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: