லக்னோ: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அதிதி சிங்கை பாஜக தலைமை களமிறக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆளும் பாஜக கடந்த ஜனவரி 15ம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று முன்தினம் 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரபிரதேசத்தின் முக்கியமான தொகுதியாக விளங்கிவரும் ரேபரேலி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் அகிலேஷ் குமார் சிங்கின் மகளான சிட்டிங் எம்எல்ஏ அதிதி சிங் மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால், இவர் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதனால், ரே பரேலியின் அரசியல் கள முகமும் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.