புதுடெல்லி: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், ‘விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு இழப்பீட்டைதான் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? அதை உச்ச நீதிமன்றம்தான் தெளிவுபடுத்த வேண்டும்,’ கோரியது. இந்த வழக்கோடு, தமிழ்நாடு பட்டாசு சங்கங்கள் தொடர்ந்த வழக்கையும் இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.