டெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என தெரிவித்துள்ள ராணுவ தளபதி எம்எம் ஜெனரல் நரவானே இதை வைத்து யாரும் தப்புக்கணக்கு ஏதும் போட்டுவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமைதி நிலவ வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையிலிருந்து பிறந்தது என்றும், எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் விளக்கினார். இந்தியாவின் எல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும் என கூறிய ஜெனரல் எம்எம் நரவனே, இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர் என்றும், இந்திய எல்லையின் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.