எருமேலியில் பேட்டை துள்ளல் பல ஆயிரம் பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக எருமேலியில் பிரசித்திபெற்ற பேட்டை துள்ளல் நடைபெறும். மகிஷியை ஐயப்பன் வதம் செய்ததை நினைவு கூறும் வகையில் இந்த பேட்டை துள்ளல் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களது உடல்களில் வண்ண சாயங்களை பூசி நடனம் ஆடியபடி இதில் கலந்து கொள்வார்கள். இவ்வருட எருமேலி பேட்டை துள்ளல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சம் இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே திருவாபரண ஊர்வலம் பந்தளத்திலிருந்து இன்று (12ம் தேதி) புறப்படுகிறது. இந்த ஊர்வலம் மகரவிளக்கு பூஜை தினமான 14 ம் தேதி மாலையில் சன்னிதானத்தை அடையும். இதன்பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அப்போது் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். ஜோதியை தரிசி்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

Related Stories: