கொழும்பு: இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் அளவு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அன்னிய செலாவணி பற்றாக்குறையினால் கடன்களை திருப்பி செலுத்த முடியாது திவால் நிலையை நெருங்கியுள்ளது. இலங்கையின் அன்னிய கடன்களின் மொத்த அளவு 3,600 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு தற்போது வெறும் 160 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. ஆனால் 2022- ல் மட்டும் 730 கோடி டாலர் அளவுக்கு அன்னிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உணவு பொருட்கள், ரசாயன உரங்கள், கச்சா எண்ணெய், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தேவைப்படும் டாலர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு 12.1% அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை, வெகுவாக உயர்ந்துள்ளன. இந்தமாத இறுதியில் 50 கோடி டாலர் மதிப்புடைய சர்வதேச கடன் பாத்திரங்கள் முதிச்சி அடைவதால் அதை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவற்றின் நிகர விளைவாக இந்த மாத இறுதியில் இலங்கை அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர். உடனடி தேவைகளை சமாளிக்க 43.7 கோடி டாலர்கள் அளவுக்கு இந்த மாத இறுதியில் புதிதாக கடன் வாங்க வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கு ஈடாக மாதம் 50 லட்சம் டாலர்கள் மதிப்பிலான தேயிலையை ஈரானிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடி அதன் மூலம் டாலர் செலவுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா அளித்த 500 கோடி டாலர் கடன்களை திருப்பிச் செலுத்த இலங்கை அரசு கால அவகாசம் கோரியுள்ளது.