தேனி: தேனியில் மீன்கடைக்காரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம். இவர் தலைமையிலான குழு, நேற்று முன்தினம் தேனி நகராட்சி அருகே திருமலைபாண்டியன் என்பவரது மீன் கடைக்கு ஆய்வுக்கு சென்றது. அப்போது கடை சுத்தம் இல்லாமலும், பழைய மீன் விற்பதாகவும் சண்முகம் கண்டித்துள்ளார். இதன் பின் மீன்கடைக்காரர் திருமலைபாண்டியனை தொடர்பு கொண்ட சண்முகம், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அவர் புகார் அளித்தார்.