கம்பம்: கம்பம் அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை வைகை தொல்லியல் பண்பாட்டு கழகத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே ஏகலூத்து பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் வழக்கறிஞர் பாலதண்டாயுதம், முருகன், சிவராமன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, புளியந்தோப்புக்குள் அருகருகே ஒரே தொடர் வரிசையில் கிழக்கு மேற்காக 2,500 ஆண்டுகள் பழமையான 3 கல்வட்டங்கள், 2 சிதிலமடைந்த கற்குவை இருப்பது கண்டறியப்பட்டது.இதுகுறித்து வைகை தொல்லியல் பண்பாட்டு கழகத்தினர் கூறியதாவது:ஏகலூத்து பகுதியில் கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட இக்கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 28 முதல் 30 அடி விட்டம் கொண்டவை. மேல்புறம் உள்ள கல்வட்டத்தின் நடுவில் கற்பதுக்கை சிதைந்த வடிவத்தில் உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்த குழுத்தலைவர்களை தாழி அல்லது கற்பதுக்கையில் வைத்து அடக்கம் செய்து, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்கி இறந்தவரின் நினைவாக குத்துக்கல் அமைப்பது வழக்கம்.