வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய உத்தரவு ரத்து அதிமுக மேல்முறையீடு வழக்கில் இன்று காலை தீர்ப்பு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றனர்.

Related Stories: