ஈரோட்டில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: டிஎஸ்பியின் ஜீப் டிரைவர் கைது

ஈரோடு: ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் செல்வன் (32). இவர், சேலம் ரூரல் டிஎஸ்பியின் ஜீப் டிரைவராக உள்ளார். இவரது மனைவி திவ்யா. இவர் ஈரோடு ரயில்வே போலீசில் காவலராக உள்ளார். ஈரோடு ரயில்வே போலீசில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், செல்வனின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார். அவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குழந்தைகள் இல்லை.  செல்வனும், ரயில்வே பெண் போலீசும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பெண் போலீசின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற செல்வன், பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்றார். செல்வன் பிடியில் இருந்து தப்பி வெளியே வந்த பெண் போலீஸ் கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் குடியிருப்பவர்கள் பெண் போலீசை செல்வனிடமிருந்து காப்பாற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஈரோடு தெற்கு போலீசில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், புகார் செய்தார். இதையடுத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து செல்வனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: