மண்ணிவாக்கம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தொடக்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: மண்ணிவாக்கம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் மண்ணிவாக்கம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆராமுதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், வட்டார கல்வி அலுவலர் காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 12 ஆசிரியைகளை நியமித்தனர். பின்னர், மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினர்.

 இதில், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.லோகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா பொன்னுசாமி, இளைஞரணி அமைப்பாளர் எஸ்.கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் ராமபக்தன் நன்றி கூறினார்.

Related Stories: