ஒன்றிய அரசு மிரட்டல்கள் மூலம் கேரளாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது: முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவின் வளர்ச்சியை ஒன்றிய அரசு மிரட்டல்கள் மூலம் தடுத்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது என்று முதலவர் பினராய் விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் சிபிஎம் மாநாடு நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: ‘நம் நாடும், உலகமும் தற்போது மிக மோசமான நிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மத சார்பற்ற நிலையை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு அதை தகர்க்க முயற்சிக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும், அதில் மதவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. கேரள அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை மிரட்டல்கள் மூலம் தடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அந்த மிரட்டல்கள் எல்லாம் கேரளாவிடம் பலிக்காது. நம் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கை தரம் பெரிய அளவில் உயர வேண்டும். அதற்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அந்த திட்டங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: