ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2022 அன்று 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.  பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 /- உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.01.2022. இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: