லக்னோ: ‘உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது,’ என்று இம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன. உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில், அடுத்தாண்டு பிப்ரவரி- மார்ச்சில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், உத்தர பிரதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு இம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக, தலைமை தேர்தல் ஆணயைர் சுசில் சுந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜிவ் குமார், அனுப் சந்திர பாண்டே ஆகியோர் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றனர். நேற்று முன்தினம் இவர்கள், இம்மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.