கான்பூர்: ‘உத்தரப்பிரதேசத்தின் ஊழல் வாசனையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறது’ என கான்பூர் மெட்ரோ ரயில் வழித்தடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி கான்பூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த தூரம் 32 கிமீ. இப்பணிகள் ரூ.11,000 கோடியில் நடந்து வருகிறது. நிறைவடைந்த புதிய வழித்தடத்தை திறந்து வைத்த மோடி, ஐஐடி கான்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். அவருடன், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் பயணித்தனர்.
பின்னர் பினா-பங்கி பல்பொருள் பைப்லைன் திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:‘உபியை கொள்ளையடிப்பதில் மட்டுமே முந்தைய அரசு கவனம் செலுத்தின. அவர்களின் ஆட்சியில் மக்கள் பெரிய ஊழல்களை மட்டுமே பார்த்தார்கள். 5 ஆண்டு ஆட்சியை பிடிப்பதை, ஊழல் செய்வதற்கான லாட்டரி அடித்ததாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
முந்தைய ஆட்சியில் இங்கு ஊழல் சென்ட் வாசனை வீசியது. இதே கான்பூரில் நடந்த ரெய்டில், கட்டுக்கட்டாக பணம் நிரப்பிய சூட்கேஸ்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவும் முந்தைய அரசின் சாதனைகளில் ஒன்று. அவர்களின் நிஜ முகம் இதுதான். அந்த ஊழலின் சென்ட் வாசத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறது.உபியை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு முந்தைய அரசுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்காமல், பல ஆண்டுகளை வீணடித்து விட்டன. நாங்கள் ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் மாநிலத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வோம்.’ இவ்வாறு அவர் பேசினார். உபி சென்ட் தொழிலதிபர் பியூஸ் ஜெயின் வீட்டில் ரூ.200 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.