திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இசை பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இசை பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 25ம் தேதி வரை விநியோகம் செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது. சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்துக்களாகவும், 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகளுடன், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.1.2022.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: