புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் அரியானாவை வீழ்த்திய ஜெய்ப்பூர்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது லீக் போட்டியில், உ.பி. யோத்தா-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 36-35 புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா த்ரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தெலுங்கு டை்டன்ஸ் 20-14 என முன்னிலை பெற்றது. ஆனால் 2வது பாதியில் சிறப்பாக ஆடிய புனேரி பால்டன், 20 புள்ளிகளை சேர்த்தது. முடிவில் 34-33 என்ற புள்ளி கணக்கில் புனேரி அணி வெற்றி பெற்றது. இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடந்த 12வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை எடுத்ததால் கடும் போட்டி நிலவியது. முதல் பாதியில் அரியானா 22-21 என முன்னிலையில் இருந்தது. 2வது பாதியில் ஜெய்ப்பூர் கைஓங்கியது. முடிவில் 40-38 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால் 18, கேப்டன் தீபக்கூடா 10 புள்ளி எடுத்தனர். அரியானா தரப்பில் கேப்டன் விகாஷ் கண்டோலா ரெய்டில் 14 புள்ளி எடுத்தார். இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி, இரவு 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: