நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகளாக கழிவறை கட்டுமானப்பணி இழுத்தடிப்பு-பலமிழந்து நிற்பதால் பெற்றோர் அச்சம்

நாங்குநேரி : நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகளாக கழிவறை நடக்கும் கட்டுமானப்பணிகளால் சுவர்கள் பலமிழந்து காணப்படுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.  நாங்குநேரி உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதன் அருகில் உள்ள காலிமனையை பள்ளி பயன்பாடுக்கு வழங்க உத்தரவிட்டும் அதனை முறைப்படி ஆவணப்படுத்தி பட்டா வழங்க வருவாய்த்துறையினர் தாமதித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இந்நிலையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் அங்கு கழிவறை கட்டி கொடுப்பதற்கு முன் வந்தது. அதற்காக அந்த நிறுவனம் சுமார் 15 லட்ச ரூபாயையும் இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளது. அதன் பின் நாங்குநேரி பேரூராட்சி மூலம் கழிவறை கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஒப்பந்ததாரர் இன்னும் பணிகளை முடிக்கவில்லை. மிகவும் தாமதமாக கட்டுமானப்பணிகள் நடந்து வருவதால் செங்கல் சுவர்கள் பலமிழந்துள்ளன.

மேலும் காங்கிரீட்  சிலாப் உடைந்து விழுகின்றன. செங்கற்களுக்கு இடையே உள்ள சிமென்ட் பூச்சு தொட்டவுடன் உதிர்ந்து விடுகிறது. இதனால் சுவர்கள் சரிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அருகில் உள்ள மற்றொரு பழைய சிறிய கழிவறையை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்காலிகமாக பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு  புதிய கட்டிடத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே உரிய விசாரணை நடத்தி தரமான பாதுகாப்புடன் கூடிய கழிவறைக்கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: