சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் போன்ற முன்னோடிகள் செய்த தியாகத்தால்தான் இன்றைக்கு திமுக ஆட்சியில் இருக்கிறது என்று சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் படத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் வீரபாண்டி ராஜாவின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வீரபாண்டி ராஜாவின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது: சேலத்தை பற்றி யார் பேசினாலும், வீரபாண்டியார் பெயரை விட முடியாது. அந்த அளவிற்கு சேலத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளார். நான், இளைஞரணி செயலாளராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது சேலத்திற்கு என்னை அழைத்து வந்து அரசு, கட்சி நிகழ்ச்சிகளை வீரபாண்டியார் நடத்தியிருக்கிறார்.