நீலகிரி: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். நீலகிரியில் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய பிறகு டிஜிபி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பயணம் செய்த MI-17V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நெஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் உடனடியாக நடைபெற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 12.25 மணிக்கு குன்னூர் காவல் நிலைய அதிகாரிகள் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் இந்த ஊருக்கே வந்து நெஞ்சப்பன் சத்திரம் மக்களுடன் சேர்ந்து 3 பேரை அவர்கள் உயிருடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தனர். அதிகமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த சிரமமாக சூழ்நிலையிலும் இந்த ஊர் மக்கள் அவர்களின் வீட்டில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து மீட்பு பணி நடைபெற்றுள்ளது. மீட்கப்பட்ட 3 பேரும் அப்போது பேசியுள்ளனர். அவர்களை சாலைக்கு தூக்கி கொண்டுவந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.