ஆபத்தை உணராத இளைஞர்கள் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாறிய ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை

நெல்லை : நெல்லையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களின் விபத்து ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான்கு வழிச்சாலை பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

நெல்லை வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டி மலையை இரண்டாக பிளந்து அமைக்கப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி மலையின் நடுவே சாலை அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி ரெட்டியார்பட்டி மலைச்சாலையின் அழகை ரசிக்காமல் செல்வதில்லை. இந்த இடத்தில் சில சினிமா படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மலை உச்சியில் காட்சி கோபுரம் அமைத்து சுற்றுலா தலமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சாலையின் சென்டர் மீடியனில் செவ்வரளி பூக்களுடன் பச்சைபசேல் என காணப்படும் செடிகள் உள்ளன. இதன்காரணமாகவே  சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வாகனங்களை நிறுத்தி அழகான சாலை மற்றும் மலையுடன் சேர்த்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் அமைத்து வருகின்றனர். சாலை பளபளப்பதால் வாகனங்கள் அதிவேகமாக பயணிக்கின்றன. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் செல்பி எடுக்க, ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர்.

சாலையை கடக்கும் போது சென்டர் மீடியன்களில் ஆள் உயரம் வளர்ந்துள்ள அரளி செடிகளால் சாலையை கடந்து வருபவர்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.எனவே ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தில் இளைஞர்கள் இங்கு குவிவதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: