பெரம்பூர்: ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அமமுக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ் கார் மீது செருப்பை வீசினர். எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் காரை வழிமறித்து அமமுகவினர் தகராறில் ஈடுபட்டதை கண்டித்து, நேற்று மாலை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.