சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். தமிழகத்தில் அண்மையில் பெய்த பெருமழையால் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடு, வாசல்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளிக்க வேண்டும். கரும்பு, பருத்தி, கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், வாழை என்று மற்றவகை விளைச்சலை இழந்தோருக்கு முழுமையான நிவாரணம் அளிக்க வேண்டும்.
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வருகிற 9ம் தேதி (வியாழன்) காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.