வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்ததை கண்டித்ததால் ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவன்: அரசுப்பள்ளியில் நடந்த அவலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 5 ஆசிரியர்களும், 15 ஆசிரியைகளும் பணியாற்றுகின்றனர். கடந்த 1ம் தேதி ஆசிரியை ஒருவர் 11ம் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை அவர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் இருமுறை அறைந்து, அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தார். இதுகுறித்த தகவலின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. ஆசிரியையை தாக்கிய பள்ளி மாணவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: