அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்-கரையோர மக்களுக்கு தண்டோராபோட்டு எச்சரிக்கை

அரவக்குறிச்சி : அமராவதி அணையிலிருந்து வரும் 2,000 கனஅடி உபரிநீர் கரூர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கின்றது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளளவும் உள்ளது.

இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம், சின்னதாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்பொழுது நெல், வாழை, மஞ்சள் போன்ற பணப் பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தால், பாம்பாறு, சின்னாறு உள்ளிட்ட கிளை நதிகளிலிருந்து அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 90 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் பாதுகாப்புகருதி அமராவதி அணைக்கு வரும் 2,000 கனஅடி தண்ணீர் திறந்து அமராவதி ஆற்றில் வெளியேற்றப்படுகின்றது. இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி, கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கரூர் நோக்கி செல்கின்றது. ஆகையால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணையின் பாதுகாப்புக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட அமராவதி ஆற்றுப்பகுதியில் இதன் காரணமாக வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: