ஆண்டிபட்டி: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). கேட்டரிங் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். சுரேஷ் மகனையும், மகளையும் அழைத்து கொண்டு திண்டுக்கல்லில் குடியேறினார். செல்வி மட்டும் பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று சுரேஷ், செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டபோது. சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
உறவினர்கள் பார்த்தபோது வீட்டு பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டதால் செல்வி உயிரிழந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.