டெல்லி: காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் அணி வீரருமான கவுதம் கம்பீர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கிழக்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர், கிரிக்கெட், அரசியல் என அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென டெல்லி போலீசாரை தொடர்புகொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.