பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 38 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்து 42420 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வினாடிக்கு 38000 கனஅடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணையிலிருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ள நீர், பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி, மழை நீர் போன்றவைகளால் பூண்டி சத்யமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 42420 கன அடியாக நீர் வரத்து உள்ளது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. எனவே இதைக் கருத்தில் கொண்டும், அணையின் பாதுகாப்பு கருதியும் உபரி நீர் வினாடிக்கு 38000 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.21 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 2888 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. எனவே பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கன்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம், சீமாவரம், வெல்லிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது.

எனவே கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: