வத்திராயிருப்பு: சதுரகிரியில் தரிசனத்துக்காக அனுமதியில்லாததால், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் பக்தர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இம்மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மழை காரணமாக நேற்று தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்தது. நேற்று காலை பிரதோஷத்தையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.