காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. இதனால், அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள், ஆறுகளில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. குறிப்பாக பாலாற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி நீர் ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு வழியாக மாமல்லபுரம் கடலில் சென்று கலக்கிறது. மேலும், செய்யாற்றில் செல்லும் 15 ஆயிரம் கன அடி நீர் திருமுக்கூடல் பாலாற்றில் கலக்கிறது.