சென்னை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசி போட்டதாக விளம்பரம் செய்கிறார் பிரதமர் மோடி என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா பாதிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒன்றிய பாஜ அரசு முழு பொறுப்பு ஏற்காமல் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் மிக பெரிய படத்தை இடம் பெற செய்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங். உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளை போட்ட முதல் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார். உண்மையில், இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்ட அதேநாள் வரை, சீனா 220 கோடி தடுப்பூசிகளை போட்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடுகிற சாதனை படைத்த சீனா, இதை ஒரு விழாவாக கொண்டாடவில்லை.