கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே பெரிய பள்ளங்கள் நிறைந்த முக்கிய சாலையை மண் கொட்டி சீர் செய்த நகர போக்குவரத்து போலீசாரை வாகன ஓட்டிகள் பாரட்டினர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வருபவர்கள் ராயக்கோட்டை மேம்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ராயக்கோட்டை மேம்பால பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை மேலும் மோசமடைந்து, பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலையை சீர்செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்ளாத நிலையில், கிருஷ்ணகிரி போக்குவரத்து போலீஸ் எஸ்ஐக்கள் நாராயணன், சீதாராமன், மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் பள்ளங்களில் மண்ணை கொட்டி சீர் செய்தனர்.