டோல்கேட் வரி செலுத்த தேவையில்லை மோடி மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு சலுகை: மபி முதல்வர் தாராளம்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு சுங்க வரி கிடையாது என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த புதன்கிழமை நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், நவம்பர் 15ம் தேதியை `ஜன்ஜதியா கவுரவ் திவாஸ்’ (பழங்குடியினரை பெருமைப்படுத்தும் தினம்) ஆக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.  அதன்படி, மத்திய பிரதேசத்தில் நாளை இது விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது. மேலும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்காக பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாரி வழங்கியுள்ளார்.

*  மாநாட்டிற்கு பழங்குடியினரை அழைத்து வரும் பேருந்துகள் நடுவழியில் பழுதானால், அவற்றை உடனடியாக சரிசெய்ய மெக்கானிக்குகள் தாயார் நிலையில் இருப்பார்கள்.

* பேருந்துகளுடன் ஆம்புலன்சும் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* பேருந்துகளின் தகுதி சான்று, ஓட்டுனர் குடிபோதை பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

* பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்ள போபால் வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கவரி (டோல்கேட்) விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

* மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் அரசு சார்பில்  இலவச உணவு வழங்கப்படுகிறது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ``நாடு முழுவதும் இம்மாநாடு பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பழங்குடியின சகோதர, சகோதரிகள் பாதுகாப்புடன் வீடு திரும்பும் வரை, அவர்களுடைய உணவு, தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளில் எந்த குறையும் வந்து விடக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: