சென்னைக்கு கடத்தி வந்ததால் ஆத்திரம் சிறுமியை காதலித்த விவகாரம் சிறுவன் அடித்துக் கொலை: முறையாக விசாரிக்காத 2 எஸ்ஐ இடமாற்றம்

வேலூர்: வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் மகன் கோகுல் (17), ஆட்டோ மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி கோகுலும், சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறினர். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேட தொடங்கினர். அப்போது, சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி சென்னைக்கு சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து சாய்நாதபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கோகுலை, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து, அனைவரும் தப்பியோடிவிட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த கோகுலை மீட்டு, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தை ராஜகுரு, அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், நண்பர்கள் தண்டபாணி, செந்தில், மாதவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் கடந்த 27ம் தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்படி எஸ்பியிடம் கோகுலின் தந்தை புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கடந்த 29ம் தேதி வேலூர்-ஆரணி சாலையில் கோகுலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவறிந்த பாகாயம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியலை கைவிட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 2 எஸ்ஐ மாற்றம்: இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்ற புகாரின்படி, பாகாயம் போலீஸ் எஸ்ஐ ரவியை அரியூர் போலீஸ் நிலையத்துக்கும், எஸ்ஐ பிரபாகரனை வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் எஸ்பி செல்வகுமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories: