ஈரோடு கீழ்பவானி கால்வாயில் 4 இடங்களில் ஏற்பட்ட நீர் கசிவு: கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு கீழ்பவானி கால்வாயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டு இருப்பதால் கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு பவானிசாகர் அணை 1955-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற 200 கி.மீ தூரம் கீழ்பவானி கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது, ஆனால் நசியனூர், தாசம்புதூர் என அடுத்தடுத்து கால்வாயில் பழுது ஏற்பட்டதால் இரண்டு முறை தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 இடங்களில் பிரதான கால்வாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் கால்வாய் பலவீனம் அடைந்திருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள விவசாயிகள் கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் ரூ.710 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. இதனால் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.                    

Related Stories: