சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையின் வெள்ள நீர் வெளியேற்ற பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுகவின் இத்தகைய அணுகுமுறைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, வரும் 9ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று.
கேரளத்தில் கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது நாடறிந்த உண்மையாகும். இந்நிலையில், கேரளத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களிலும் நீரை தேக்கி வைப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்மட்டம் 139.5 அடியை எட்டிய நிலையில், அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, தொடரும் கனமழை ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டே படிப்படியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.