டெல்லி சட்டப்பேரவை குழு முன் ஆஜராக பேஸ்புக்கிற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக 2020 பிப்ரவரியில் வன்முறை வெடித்தது. இதில், 53 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ‘சமூக ஊடகங்களில் பரவிய தவறான வதந்திகள்தான் வன்முறைக்கு காரணம்,’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ‘டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அமைதி மற்றும் நல்லிணக்க குழுவை உருவாக்கி, சமூக ஊடகங்களை அழைத்து, தவறான செய்திகள் பரவாமல் தடுப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப்பை உணர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி. எம்எல்ஏ ராகவ் சட்கா தலைமையில் ‘அமைதி மற்றும் நல்லிணக்க குழு’ அமைக்கப்பட்டது. டெல்லியில் பேஸ்புக் உறுப்பினர்கள் அதிகளவில் இருப்பதால், இந்த குழு முன்பு நவம்பர் 2ம் தேதி ஆஜராக பேஸ்புக் நிறுவன மூத்த பிரதிநிதியை அனுப்பிவைக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், குழு முன்பு ஆஜராக தகுதியான அதிகாரியை அடையாளம் கண்டு வருவதால் மேலும் 14 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரியது. இதை ஏற்ற குழு, 14 நாள் அவகாசம் வழங்கியதுடன் நவம்பர் 18ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு அந்நிறுவனத்தின் பிரதிநிதி குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: