ஷார்ஜா: ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 35 ரன்களுக்கு ஜோசன் ராய், மலான், பேர்ஸ்டோ ஆகிய முக்கிய விக்கெட்களை இழந்து தவித்தது. முதல் பத்து ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இங்கிலாந்து அணி பட்லர்- கேப்டன் மோர்கன் கூட்டணியின் அதிரடியால் ரன்விகிதம் அதிகரித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து டி20ல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இதனால் 19 ஓவரில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை பறிகொடுத்து தோல்வியடைந்தது. ஆல்ரவுண்டர் ஹசரங்கா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இங்கிலாந்து அணி உறுதி செய்தது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.