ஓபிஎஸ் சகோதரர்- டிடிவி தினகரன் ரகசிய பேச்சு மதுரையில் அதிமுக தலைவர்களை சந்திக்க சசிகலா திட்டம்? பரபரப்பு தகவல்கள்

திருச்சி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சை அடுத்த பூண்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், சசிகலா கலந்துகொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா பங்கேற்றார். மேடையிலேயே டிடிவி தினகரன்-ஓ.ராஜா ஆகியோர் தனியாக சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம், தனது சகோதரர் ஓ.ராஜாவிடம் முக்கிய தகவல்களை சொல்லி அனுப்பியதாகவும், அதை அவர், டிடிவி தினகரனிடம் தெரிவித்ததாகவும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தஞ்சாவூரில் தங்கியிருந்த சசிகலாவிடம் அந்த தகவலை டிடிவி தினகரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து நேற்று மதியம் மதுரைக்கு காரில் சசிகலா புறப்பட்டு சென்றார்.

மதுரையில் தங்கும் அவர் தென்மாவட்ட அதிமுக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை வருவதற்கு முன்பே தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய தலைவர்களிடம் சசிகலா செல்போனில்  ‘‘உங்கள் இடத்திற்கு வந்து நேரில் சந்திக்கிறேன்,’’ என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள், நேரில் இப்போதைக்கு வர வேண்டாம். முக்கிய தகவல்களை போன் மூலம் கூறுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதில் வாய்ப்புள்ள தலைவர்களை நேரில் அழைத்தும், சிலருடன் செல்போன் மூலமும் சசிகலா பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: