தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு : முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்

சென்னை : தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தறி தொகுப்பு ஆகியவற்றைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Powered by FatChilli Ads

 

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம் & கோயம்புத்தூர் பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள், சின்னாளப்பட்டி பட்டு / பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல் & பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமுக்காளம் 30 புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை & சட்டை 50 புதிய வடிவமைப்புகள் ஆகியவை அடங்கிய “தமிழ்த்தறி” என்ற தொகுப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

சரிகை உத்தரவாத அட்டை

காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரிகையில் உள்ள தங்கம் & வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாத அட்டையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மென்மையான, இயற்கை பருத்தி நூலினை உபயோகித்து பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை ரகங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

ஆதிரை கலெக்சன்ஸ் பட்டுப் புடவைகள்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் புதிய முயற்சியாக இந்தாண்டு பெண்களைக் கவரும் வகையில் ஆதிரை கலெக்சன்ஸ் வகையான அச்சிடப்பட்ட பட்டுப் புடவைகள், டிஜிட்டல் பிரிண்டிங் பட்டுப்புடவைகள், கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பட்டுப் புடவைகள், மற்றும் மெல்லிய ரக பருத்தி இழை புடவைகள் ஆகியவற்றையும் தமிழ்த் தறியின் ஒருபகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: