காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 126 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடிய இடங்களாக அறியப்பட்டுள்ளது என கலெக்டர் ஆர்த்தி கூறினார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. பின்னர், கலெக்டர் ஆர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது. அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள், செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். இடர்பாடுகளின் போது தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் என்ன, முதலில் உதவி செய்பவர்கள் பயிற்சி அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 126 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடிய இடங்களாக அறியப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரங்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.