திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 20வது மாதம் தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 20வது மாதமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மலையை சுற்றியுள்ள 14 கி.மீ தூரம் உள்ள மலை பாதையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் ெகாரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 19ம்தேதி (நாளை) காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக உள்ளது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தொடர்ந்து 20வது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் பா.முருகேஷ் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் பா.முருகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, பவுர்ணமி தினமான 19ம்தேதி காலை முதல் 21ம் தேதி இரவு வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: